வந்து சென்றோர்!

Saturday, 17 March 2012

Tweeeeets!

திருமணத்தன்றே கெடா வெட்டி பந்தி போடும் புது சம்பிரதாயம் நம் சமூகங்களில் பெருகி வருகிறது.. ஏன்னு கேட்டா, காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்னு ஒரு யூஸ்லெஸ் ஆன்சர் வேற... என்னைப் பொறுத்த வரை, அது இந்துவோ, முஸ்லிமோ, கிருத்துவமோ.. திருமணத்தன்றே பல உயிர்களை பலியிட்டு, புது வாழ்க்கையை துவங்குவதென்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை.. இந்து முறையில், திருமணத்தன்று வீட்டு வாசலில் வாழை மரம் கட்டுவதில் கூட எனக்கு உடன்பாடில்லை... வாழையடி வாழையாய் தழைக்க வேண்டிய திருமண பந்தமும் அதன் தலைமுறைகளும், ஒரு வாழைத்தாயின் மரணத்தில் ஆரம்பமாவதை எவ்வாறு சுபமாக கருதமுடியும்... மாறாக ஒரு மரக்கன்றை நம் வீட்டு முற்றத்திலோ, தோட்டத்திலோ நட்டுவைத்து துவங்கலாம், திருமணமெனும் புனித பந்தத்தை..

சுவரில்லா சித்திரம்!!

சுவரில்லா சித்திரம்,
என்னவளின்
கையசைவில்..!


 

ஆத்ம காதல்!!

அதீத அன்பையும்,
அக்கறையையும்
தாண்டியதோர் வலிமை
சிறு பிரிவிற்க்குண்டு,
'ஆத்ம காதலை' உணர்விக்க..


 

'பொக்கிஷமாய்'!

கிழித்தெறியப்பட
வேண்டிய காதல் கடிதங்கள் பல,
இன்னும் என் இதயப் பெட்டகத்தில்
'பொக்கிஷமாய்'!
 

Tweeeeets!

சுயசுத்தம், நாகரீகம், நாவடக்கம்.. இவையாவும் அற்றவரே நம் பார்வையின் அருவருப்பை சுமக்க தகுதியானவர்கள்... மாறாக திருநங்கைகளும், மாற்றுதிறனாளிகளும், நோய்வாய்ப்பட்ட முதியவர்களுமே இதில் பெரும்பாலும் தண்டிக்கப்படுகிறார்கள்... இறைவனொருவன் இருந்தால், படைப்பில் பிழை செய்தவன் அவனே.. குற்றங்களும் அவனையே சாரும்... பாவமொரு பக்கம்.. பழியொரு பக்கம்..!

Tweeeeets!

சந்தோஷ தருணங்களின் முழுமையான சுவையுணர இரு துளி கண்ணீர் அவசியமாகிறது!!

Wednesday, 7 March 2012

நேரத்தின் மதிப்பு!!

நேரத்தின் மதிப்பை
உணர்ந்தேன்.
மூவாயிரத்து ஐநூறு
விலை பெற்ற கடிகாரத்தில்..


Sunday, 4 March 2012

நிசப்தம்!

அழுத குழந்தையின்
உறக்கத்தில்
உயிர்த்தெழுந்தது
நிசப்தம்..


Friday, 2 March 2012

காதலை மறந்ததேனோ??

ஊண், உடை, உறையுள்..
நான்காவதாய் காதலை
மறந்ததேனோ என் தமிழ்ப் பாட்டனே??


Tweeeeets!

வயதானவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் பார்க்கும் பொழுது ஒருவித இனம்புரியாத பரிவும், பரிதாபமும் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமலே போகிறது.. அதே நேரம் அவர்கள் பொது இடங்களில் மற்றவர்களை தரக்குறைவாக பேசும்பொழுதும், அநாகரிகமாக நடந்துகொள்ளும் பொழுதும் வழக்கத்தைவிட அதிகமான கோபம் வரத்தான் செய்கிறது.. இது அவர்களினால் மதிக்கப்படாத என் பரிதவிப்பினாலா அல்லது காப்பாற்றிக் கொள்ளப்படாத மரியாதையினாலா என்று விளங்கவில்லை..

Thursday, 1 March 2012

Tweeeeets!

அன்பிற்கு இணங்காதவர்களும், சிறு அதட்டலுக்கு இணங்கத்தான் செய்கிறார்கள்!



Wednesday, 29 February 2012

விதை!

தன்னம்பிக்கையின் விதையை
இடறி விழும் மழலையின்
மனதில் விதைத்தது தான் யாரோ,
யாதொரு சலனமுமின்றி
எழுந்து நிற்க முற்படுகிறதே அக்கணமே!

Monday, 27 February 2012

காதல்!

உன்னவளின் முகம்தனை,
நீ காணும் கன்னியரில்
காணப்பெறும் அக்கணமே
அவள் காதல் முழுமையுறும்!


இன்னொருமுறை பார்க்கலாம்!

என் கைகளில் அவளை 
கிள்ள வைக்கவே, 
சாலையில் செல்லும் 
வேறொரு பெண்ணை 
இன்னொருமுறை பார்க்கலாம்!



Friday, 24 February 2012

Tweeeeets!


தற்காப்புக்காக செய்யும் கொலை, குற்றமே அல்ல.. இது நமது இந்திய அரசியல் சாசனம் சொல்வது... உயிரை விட உயரிய மானம் காக்க, தன்னையே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை மட்டும் குற்றமாம்.. இங்கு நான் தற்கொலையை நியாயப்படுத்தவில்லை.. அதே சமயம், நம் அரசியலமைப்பு தெள்ளத்தெளிவாக நடுநிலையாய் வரையறுக்கப்படவில்லையோ எனத்தான் தோன்றுகிறது..

Thursday, 23 February 2012

பட்டறிவும், பகுத்தறிவும் அவசியமாகிறது!!

என்ன தான் பாசம், நேசம் என ஒருபுறம் இருந்தாலும், அவையெல்லாவற்றையும் விட பணம் தான் வாழ்க்கை என்பதை நம் சமுதாயமும், பெற்றவர்களும் நாம் பிறந்தது முதலே நம் மனதில் வலுக்கட்டாயமாக எழுதி வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. 

நம் சிறுவயதில் அவர்கள் நமக்கு வாங்கித்தரும் பொம்மையிலிருந்து, சட்டை, ட்ரவுசர், ஷூ வரை இந்த பட்டியல் நீள்கிறது.. அதில் நிறைந்த பாசத்தை விட, 'அது விலை அதிகம்.. பத்திரமா வச்சுக்க.. உடைச்சுடாத.. கிழிச்சுடாத'.. என சொல்லப்பட்டு தான் வளர்க்கப்படுகிறோம்..

பள்ளிப்பருவத்தில் நாம் பணத்தின் அருமையை உணர வேண்டும் என அவர்கள் செய்யும் அதீத கட்டுப்பாடினால், தடம் தவறி சொந்த வீட்டிலேயே கயவர்களாக மாறிய சிறுவர்களின் கதை பல உண்டு.. தாராள போக்கும், அதீத கட்டுப்பாடும் எத்தகைய மனிதனையும் தவறு செய்ய நிச்சயம் தூண்டும்.. நம் வாழ்க்கையை முன்னரே தீர்மானிக்கும் பொறுப்பு நம் பெற்றோர்களின் கைகளின் வந்துவிடுகிறது... இதை உணர்ந்து நம்மை சரியான வழியில் நெறிப்படுத்திட எத்தனை பெற்றோர்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை..

அடுத்து, நாம் சற்று பெரியவனானதும்.. நீ டாக்டர் ஆகணும் இல்லனா எஞ்சினியர் ஆகணும் என நம் விருப்பங்களில் வியாபாரப்பாங்கை திணிக்கிறார்கள்.. அவர்களை பொறுத்தவரை இவ்விரண்டு தொழில்கள் தான் வருமானத்தை வாரி இறைக்கும்,, இதைத்தவிர வேறு ஏதாவது துறையில் நாம் செல்ல விரும்பினால், அதற்கு சமுதாயத்திற்கு முன்பாகவே நம் பெற்றோர்கள் தான் முதல் எதிரியாக வந்து நிற்கிறார்கள்.. வேறு வழியின்றி, எதிர்த்து சாதிக்க திராணியில்லாமல் எத்தனை எத்தனையோ ஆண்களும் பெண்களும் இங்கு, சமூகத்தால் திணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..

பணத்தை தாண்டியும் ஒரு வாழ்க்கை உள்ளதென்பதை கற்றுக்கொடுக்க மறந்துவிடத் தான் செய்கிறார்கள்.. இந்த நிலையை களைய கல்வியறிவு மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.. கூடவே பட்டறிவும், பகுத்தறிவும் அவசியமாகிறது....


Wednesday, 22 February 2012

வேறெதில் சாத்தியம்?

சட்டென வெறுத்து, 
சட்டென விரும்ப 
காதலைத்தவிர 
வேறெதில் சாத்தியம்?



Tweeeeets!

பள்ளிகளில் நான் படித்த அறிவியல்/கணித பார்முலாக்களும், தியரங்களும் இன்று துளியளவு கூட ஞாபகமே இல்லை.. ஆனால் இன்றும் நினைவில் இருப்பவை அன்று படித்த அந்த சிறுகதைகளும், வரலாற்று நிகழ்வுகளும், உடற்கூறு அறிவியலும், CASE STUDIES-களும் தான்... கற்கும் கல்வியை யதார்த்தமான வாழ்வியலோடு பிணைக்காத வரை எத்தனை சமச்சீர் கல்வித்திட்டங்கள் வந்தும் எந்தப் பலனும் இல்லை..

Tweeeeets!

தவரே செய்திராமல் யாராலும் இருந்திருக்கவோ, இருக்கவோ முடியாது.. அவரவர் செய்த தவறுகளின் அடிப்படையிலும், எண்ணிக்கையிலும் காணும் திரெஸ்ஹோல்டு லெவல் மதிப்பீடில் வேண்டுமானால் நல்லவன், கெட்டவன் என வகைப்படுத்திக் கொள்ளலாம்!...

Tweeeeets!

காதலிக்கும் முன் பெண்ணும், கல்யாணத்திற்கு முன் ஆணும் எடுக்கவிருக்கும் முடிவே அவர்களின் எதிர்காலத்தை தெளிவுபட தீர்மானிக்கிறது!

Tweeeeets!

தவறு செய்வதில் உள்ள தைரியம் ஏனோ, 
அதை ஒப்புக்கொள்வதில் இருப்பதில்லை!

Tweeeeets!

இனம் புரியாத ஈகோ (Ego), பல தருணங்களில் உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது!

Tuesday, 21 February 2012

Tweeeeets!

வழியெங்கும் துரும்புகள்.. அதில் எவை எவை பல் குத்த உதவும் என கண்டறிவது தான் மிக கடினமான செயல்!

மாயை?

என் பார்வை 
விரியும் இடமெங்கும்
வியாபித்திருக்கிறாய் நீ.. 
என் உலகமே உன்னுள் 
சுருங்கியதாலேயோ அந்த மாயை?



Tweeeeets!

தவறு செய்வதில் உள்ள தைரியம் ஏனோ, 
அதை ஒப்புக்கொள்வதில் இருப்பதில்லை!

நகரத்து நெரிசல்!!

துணை வந்த 
ஆயிரம் பேரில் 
அன்பு காட்ட ஆளில்லை..
'நகரத்து நெரிசல்'



Tweeeeets!

இனம் புரியாத ஈகோ (Ego), 
பல தருணங்களில் 
உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது!

Monday, 20 February 2012

ஆறறிவு!!

உள்ளொன்று வைத்து 
புறமொன்று காட்ட
ஆறறிவோ எனக்கில்லை..
'கண்ணாடி'



Saturday, 18 February 2012

கவி!!

இலக்கணமும் 
இலக்கியமும் தேவையில்லை.. 
புரிதல் மட்டும் போதும் கண்ணே
புத்துணர்வாய் கவியெழுத!



தனிமை!!


தனிமையே உணரேன் 
கடற்கரையில்..
சலிக்க சலிக்க பேசும் 
அலைகளின் மத்தியில்..!

ஓய்விலா மேகமே...!!

யாரைத் தேடி 
உன் நெடும்பயணம்?
ஓய்விலா மேகமே...



Friday, 17 February 2012

அஞ்சல் அட்டை!

காலம் காலமாய் 
காதலை சுமந்து, 
காலத்தினாலேயே 
காணாமல் போய்விட்டது..
'அஞ்சல் அட்டை'



சில்லறை இல்லப்பா!

நட்சத்திர ஓட்டலில் 46 ருபாய் டிப்ஸ்..
சிக்னலில் நின்ற
பசித்த சிறுவனிடம், "சில்லறை இல்லப்பா"



ஓய்வு?

ஓயாமல் உழைத்த பெற்றோர்
ஓய்வெடுக்கிறார்கள்..
முதியோர் இல்லத்தில்!

தனிமையிலும்!!

தனிமையிலும் 
சலிக்க சலிக்கப் பேசுகின்றன
கடலலைகள்!



தந்தை!!

எழுப்பியும் எழாததால்
குழந்தைக்கு கோபம்..
கூலி வேலை பார்த்து வந்து 
களைப்பில் உறங்கும் தந்தை!!



கரை!!

சிறு கரை படிந்த புதுப் புடவை,
பரண் மேல் வீசினாள் அம்மா.
பொங்கலுக்கு இலவச புடவை 
இல்லையாம், ஏக்கத்தில் எதிர் வீட்டு ஏழைப் பெண்..



கடவுளும், காதலும்!

கடவுளும், காதலும் உண்மை..
அதன் மேல் நம்பிக்கை உள்ளவரை!!



மின்சாரம்!

மின்சாரம் இல்லா இரவுகளில் தான் 
நண்பனிடமோ, மனைவியிடமோ 
மனம் விட்டு பேச முடிகிறது! 


கைம்மாறு!!

கோவில் வாசல் பிச்சைக்காரன்
பக்தர்களின் செருப்புக்கு காவல்.
கடைசியில் ஒரு ருபாய் பிச்சை!
"கைம்மாறு"



சந்தோசமா சந்தோஷம்!!

சுட்டு போட்ட வெயில்ல 
ரோடு போட நான் நிக்க, 
ஏ.சி போட்ட கம்பெனியில 
எம்புள்ளைக்கு வேல! 
சந்தோசமா சந்தோஷம்..

"சந்தோசமெல்லாம் போதுமுங்க
தூங்கப் போங்க..
வெள்ளனே போவ வேணும்
கரிசபட்டிக்கு தாரு போட" - என் பொண்டாட்டி



அவளின் உலகம்!!

காலையில் கிளம்பும்போதே சண்டை
வேலை முடிந்து வீடு திரும்ப மனமில்லை.
நண்பர்களுடன் ஊர் சுத்த கிளம்பிவிட்டேன்
கேலக்சி பாரில், மூன்று பெக் முடித்து அங்கேயே டின்னர். 
வீடு திரும்ப நள்ளிரவு 1 மணி.
அவளுக்கும் கோபம் தான். கதவைத் திறக்கையில் கண்டேன்.
உள்ளே வந்ததும்,
"கோபத்துல காலையிலருந்து சாப்பாடு எதும் பண்ணல. தோச சுடவா, சாதம் வைக்கட்டுமா?" - கேட்டாள்.
அவளின் உலகம் எவ்வளவு சிறியது என ஒரு வரியில் புரியவைத்துவிட்டாள்.
மன்னிப்பு கேட்டு, நானே தோசை சுட்டு அவளுக்கு ஊட்டிவிட்டு உறங்கச் சென்றேன் - நிம்மதியாக.
இனி சண்டையே போடக்கூடாது என்ற முடிவோடு..!



கடங்காரன் ஆகிப்புட்டேன்!

பள்ளிக்கூடம் போவயில 
பொட்டிக்கட ஆயாகிட்ட 
காலணா கடல முட்டாய 
களவாண்டு திண்டு புட்டேன். 
இருபத்து மூணு வருஷம் தாண்டி 
ஞாபகந்தான் வந்தடைக்க 
திரும்பிப் போனேன்
கடனடைக்க.
"ஆயா செத்து ஏழு வருசமாயிடிச்சுங்க. நீங்க யாரு - நான் அவங்க பையன்தான்"
கேட்டதுமே பதறிப்புட்டேன்.
ஆயுசுக்கும் கடங்காரன் ஆகிப்புட்டேன் என்ன செய்வேன்?



தனிமை!!

துணையால் வரும் வலிகளால்
தனிமை 
பல தருணங்களில் 
இனிக்கத் தான் செய்கிறது!


வெற்றிக்கு!!

உழைப்பையும், நேர்மையையும்
தவிர ஊக்கமும், பாராட்டும் 
வெற்றிக்கு ஒரு அவசியமாகிறது!



விபத்து!

யாதொரு விபத்தை பார்க்கையிலும்
மனிதாபினத்தை விட 
பயமே முந்திக்கொண்டு நிற்கிறது!



மறுக்கிறது என் மனம்!!

அன்று காதலியாக அவள் செய்த 
தவறுக்கு மன்னிப்பு நான் கேட்டு 
சமாதானம் செய்திருந்தும்,
இன்று கணவனாக நான் செய்யும் 
தவறுக்கும் மன்னிப்பு கேட்க 
மறுக்கிறது என் மனம்! 
இந்த அதிகாரத் திமிரினை அறுத்தெறிய 
மருந்துண்டோ இப்பூவ்வுலகில்??



சில நேரங்களில்!!

அடையாள மறுப்பே 
சில நேரங்களில் 
அங்கீகாரத்தை பெற்றுத் 
தந்துவிடுகிறது!



வளர்ச்சித் திட்டங்கள்!

நலன்காக்கும் 
வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் 
அடிக்கல்லில் மட்டும்! :(



தோற்றுப்போன காதல்!!

பெரும்பாலும் 
தோற்றுப்போன காதல்களின் 
பின்னணியில் 
அதீத அன்பின் வெளிப்பாடே 
மறைந்து நிற்கிறது!



காதலுடன்... நான்!

என் காதலை வெளிப்படுத்த எதுக்கடி தனியொரு நாள்..
எந்நாளும் எக்கணமும் என் அன்பு உனக்கே தான்! 
உனக்கே உனக்காகத் தான்... 
காதலுடன்... நான்!







செந்தூரம்!!

கீழ்வானம் தெளிக்கும் 
அந்தி மந்த செந்தூரம் 
உன் முகம் பார்த்து நாணும் 
மென்மலரை நினைவூட்டியதே!



அம்மா!!

அம்மாவுக்கு மேலுக்கு முடியலப்பா 
பணம் கொஞ்சம் அனுப்பி விடறியா?
"எனக்கே இங்க டைட்டா இருக்குப்பா.. 
முடிஞ்சா பாக்கறன்.. சரி வச்சிடறேன்" - தொலைபேசியில் என் மகன்

"என்னங்க.. புள்ள நல்லாருக்கானா..? என்ன சொன்னான்?
எப்ப வர்றானாம்??" - அவன் அம்மா :(



மின்வெட்டு!

அவள் இமை மூடும் போதெல்லாம் 
மின்வெட்டு.. 
என் இதயத்தில் மட்டுமல்ல.. இல்லத்திலும்!! :)







பனித்துளி!

தளிர் இலை மேல் 
பனித்துளி.. 
அவள் கன்னத்தில் பரு!



ஓய்வு கிடைத்தது??

ஒற்றைக்காலில் ஒரே இடத்தில் 
பல நூறு ஆண்டுகளாய்..
ஓய்வு கிடைத்தது..
வெட்டுண்ட ஆலமரம்! :(



மரண தண்டனை..?

யார் செய்த 
வினையால், 
எனக்கு மரண தண்டனை..?
'ஆம்லெட்'!



பேருந்து!

தாயென அழைப்பதா
தந்தையென அழைப்பதா
தினம் எனை சுமக்கும்
பேருந்தை..!